இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற 2030ம் ஆண்டுக்குள் விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது: இஸ்ரோ ஏற்கெனவே இந்தியாவின் துணை சுற்றுபாதை விண்வெளி சுற்றுலாவுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது. சுகன்யான் என்பது இந்தியாவில் மக்களுக்கான முதல் விண்வெளி பயண திட்டமாகும். மக்களின் விண்வெளி பயணங்களுக்கு தேவையான பல்வேறு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இவ்வாறு தனது பதிலில் கூறியுள்ளார்.
அண்மைச் செய்தி: இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி விளக்கம்
இந்த திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், 2030ம் ஆண்டுக்குள் இந்திய பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த சுற்றுலா திட்டம் மிகவும் பாதுகாப்பானது. விண்வெளி உடைகளை அணிந்து ராக்கெட்டில் விண்வெளிக்கு பயணம் செல்ல முடியும். விண்வெளி சுற்றுலா செல்வதற்கு ஒரு நபருக்கு ரூ.6 கோடி கட்டணம் ஆகும். விண்வெளி சுற்றுலா மேற்கொள்பவர்கள் தங்களை விண்வெளி வீரர்கள் என்று அழைக்க முடியும்” என்று கூறினார்.







