“இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு…” – அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… சவரம் ரூ.73 ஆயிரத்தை கடந்து விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விலை அதிரடியாக குறைந்த நிலையில் தங்கம் ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

இதையும் படியுங்கள் : “விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்” – பிளஸ் 2 மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. அந்த வகையில், தங்கம் விலை நேற்று முன்தினம் (மே 6) கிராமுக்கு ரூ.325 உயர்ந்து ரூ.9,100-க்கும், சவரனுக்கு ரூ.2,600-ம் உயர்ந்து ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று (மே 7) கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.9,075-க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.72,600-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று (மே 8) அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.9,130-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.110-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.