நீர்நிலை ஆக்கிரமிப்புக்குப் பட்டாவா? நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர் செல்ல முடியாத நிலையில் வறட்சி ஏற்படுவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்குப் பட்டா வழங்க ஏதுவாக, அந்நிலங்களைக் கிராம நத்தம் உள்ளிட்ட நிலங்களாக மறுவகைப்படுத்தக் கூடாது…

தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர் செல்ல முடியாத நிலையில் வறட்சி ஏற்படுவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்குப் பட்டா வழங்க ஏதுவாக, அந்நிலங்களைக் கிராம நத்தம் உள்ளிட்ட நிலங்களாக மறுவகைப்படுத்தக் கூடாது எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள நரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள வாய்க்கால் புறம்போக்கு நிலத்தை, கிராம நத்தமாக மாற்றம் செய்து தங்களுக்குப் பட்டா வழங்க உத்தரவிடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த சசிகலா, தினேஷ் உள்ளிட்ட 65 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. குறிப்பிட்ட அந்த நீர்நிலை நிலத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளது,அதன் ஒரு பகுதி நிலம் ஏற்கனவே நத்தம் நிலமாக மறுவகை செய்யப்பட்டதால், தங்களுக்குப் பட்டா வழங்கும் வகையில் நிலத்தைக் கிராம நத்தம் நிலமாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். ஏற்கனவே நத்தம் நிலமாக மறுவகைப்படுத்தி அரசு செய்த சட்ட விரோத நடவடிக்கையின் அடிப்படையில் மறுவகைப்படுத்த மனுதாரர்கள் கோர முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால் ஒருபுறம் வெள்ள பாதிப்புகளும், கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர் செல்ல முடியாத நிலையில் வறட்சி ஏற்படுவதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்குப் பட்டா வழங்கும் வகையில் அந்த நிலத்தை மறுவகைப்படுத்த கூடாது எனத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.