கூட்டுறவு ஆலை அமைக்காமல் அலைக்கழிப்பது தான் திமுக அரசின் உழவர் நலனா? – நயினார் நாகேந்திரன்!

மரவள்ளிக்கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைத்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கூட்டுறவு ஆலை அமைத்து உரிய விலை நிர்ணயம் செய்ய வழிவகுக்க வேண்டும் என மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்திவரும் வேளையில், அதனைக் கண்டுகொள்ளாது
அரசு அலட்சியப்படுத்துவது கண்டனத்திற்குரியது.

தேர்தல் சமயத்தில் “மரவள்ளிக்கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என திமுக தேர்தல் வாக்குறுதி எண் 35-ல் உறுதியளித்துவிட்டு அதனை நிறைவேற்றாது விலை வீழ்ச்சியால் விவசாயிகளை அவதியுறவிட்டதோடு, தற்போது கூட்டுறவு ஆலையும் அமைக்காமல் அலைக்கழிப்பது தான் திமுக அரசின் உழவர் நலனா?

விவசாயிகளுக்கு முறையான பாசன வசதி ஏற்படுத்தித் தருவதில்லை, விளைவித்த பயிருக்கு முறையான விலை கிடைக்க வழிவகுப்பதில்லை, உழவர் நலன் தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதும் இல்லை, இந்த லட்சணத்தில் “பச்சை துண்டு போடும் போலி விவசாயி நான் அல்ல” என்று ஆவேசமாக முழங்குவதால் மட்டும் என்ன பயன் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்! விளம்பரங்களை விடுத்து, உடனடியாக மரவள்ளிக்கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைத்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.