பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
சத்தீஷ்கர் மாநிலம் நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சோனியா காந்தி பேசியதாவது: காங்கிரஸ் கட்சிக்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் இது சவாலான நேரம். நாட்டின் அனைத்து நிறுவனங்களையும், பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பற்றி நாசமாக்கியுள்ளது. ஒருசில தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருப்பதால் சீரழிந்துள்ளது.
மன்மோகன் சிங்கின் தலைமையில் 2004 மற்றும் 2009 தேர்தலில் எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி அளித்தது. ஆனால், காங்கிரஸின் திருப்பு முனையாக பாரத் ஜோடோ யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் நிறைவடைவதுதான் எனக்கு மகிழ்ச்சி. இந்திய மக்கள் நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சமத்துவத்தை விரும்புகிறார்கள் என்பதை இந்த பாரத் ஜோடோ யாத்திரை நிரூபித்துள்ளது. இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு எந்த இருக்கை? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்
சோனியா காந்தி தனது இன்னிங்ஸ் நிறைவடைவது குறித்து பேசியிருப்பது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து உணர்த்தும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் 2024ம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியில் பல மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.