போர்க்கப்பல் மூழ்கடிப்பு : இறந்த வீரர்களின் உடல்களை ஒப்படைக்க கோரி இலங்கைக்கு ஈரான் வேண்டுகோள்…..!

அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிந்த வீரர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும் என இலங்கைக்கு ஈரான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்திய பெருங்கடலில் இலங்கையில் இருந்து 40 மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த ஈரான் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்காவின் நீர் மூழ்கி கப்பல் தாக்கி முழ்கடித்தது. இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட ஈரானிய வீரர்கள் உயிரிழந்தனர்.

தொடர்ந்து இலங்கை கடற்படை மீட்பு பணிகளில் ஈடுபட்டது. அதன்படி உயிரிழந்த ஈரான் வீரர்களின் உடல்கள் இலங்கை தெற்கு மாகாணத்தில் உள்ள கராபிட்டி மருத்துவமனையில் உள்ள பிணவரையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காயங்களுடன் மீட்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இறுதிச் சடங்குக்காக உயிரிழந்த ஈரானிய வீரர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும் என இலங்கைக்கு ஈரான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அரசும் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள வீரர்களின் உடல்களை கப்பல் அல்லது விமானம் வழியாக ஈரானுக்கு ஒப்படைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.