ஐபிஎல் இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் மழை நின்றதால் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் போட்டி தொடங்கப்பட உள்ளது.
ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இறுதிப்போட்டி நேற்று நடைபெற இருந்த நிலையில், இரவு 11 மணி வரை மழை பெய்ததால், இன்றைக்கு ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், 7.30 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது.
குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்லும் ரித்திமான் சாஹாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். சுப்மன் கில் 7 பவுண்டரிகளை பறக்க விட்டு 39 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவின் பந்துவீச்சில் கேப்டன் கூல் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை அடுத்து ரித்திமான் சாஹா அரை சதம் கடந்த நிலையில் 54ரன்களில் தீபக் சாஹரின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சாய் சுதர்சன் ஜோடி அதிரடி காட்டியதால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து 200 ரன்களை கடந்தது. இந்த நிலையில் சாய் சுதர்சன் 96 ரன்களில் பத்திரனாவின் பந்து வீச்சில் LBW ல் அவுட் ஆனார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது பத்திரனா கடைசி ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த நிலையில் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக கெய்க்வாட்டும் , கான்வேயும் களமிறங்கினர். மூன்றாவது பந்தில் கெய்க்வாட் பவுண்ட்ரி அடித்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது. சென்னை அணி 3 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்துள்ளது.
மழை நின்ற பின் மைதானம் சரிசெய்யப்பட்ட நிலையில் 12:10 மணிக்கு மீண்டும் போட்டி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 ஓவார்களாக இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.