ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
ஐபிஎல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இறுதிப்போட்டி நேற்று நடைபெற இருந்த நிலையில், இரவு 11 மணி வரை மழை பெய்ததால், இன்றைக்கு ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், 7.30 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது.
குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்லும் ரித்திமான் சாஹாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். சுப்மன் கில் 7 பவுண்டரிகளை பறக்க விட்டு 39 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவின் பந்துவீச்சில் கேப்டன் கூல் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை அடுத்து ரித்திமான் சாஹா அரை சதம் கடந்த நிலையில் 54ரன்களில் தீபக் சாஹரின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சாய் சுதர்சன் ஜோடி அதிரடி காட்டியதால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து 200 ரன்களை கடந்தது. இந்த நிலையில் சாய் சுதர்சன் 96 ரன்களில் பத்திரனாவின் பந்து வீச்சில் LBW ல் அவுட் ஆனார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது பத்திரனா கடைசி ஓவரில் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த நிலையில் 215 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக கெய்க்வாட்டும் , கான்வேயும் களமிறங்கினர். மூன்றாவது பந்தில் கெய்க்வாட் பவுண்ட்ரி அடித்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது. சென்னை அணி 3 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்துள்ளது.
மழை நின்ற பின் மைதானம் சரிசெய்யப்பட்ட நிலையில் 12:10 மணிக்கு மீண்டும் போட்டி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 ஓவார்களாக இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆட்டத்தை தொடங்கிய கெய்க்வாட்டும், கான்வேயும் அதிரடியாக விளையாடி அணியை ரன் எண்ணிக்கையை அதிகரித்தனர். 26 ரன்னில் கெய்கவாட் ஆட்டமிழக்க அதனைத் தொடர்ந்து கான்வேயும் 47ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே சிவம் தூபே ஜோடி ஆட்டத்தின் சுவாரஸ்யம் குறையாமல் விளையாடிய நிலையில் ராஹானே ஆட்டமிழந்து சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்த போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ள அம்பதி ராயுடு அதிரடியாக விளையாடி பந்துக்களை பவுண்ட்ரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் பறக்க விட்டார். அதன் பின்னர் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் தோனியும் டக் அவுட் ஆனார்.
அதிர்ச்சியில் உறைந்திருந்த ரசிகர்களுக்கு ஆறுதல் தர களமிறங்கிய ஜடேஜா பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஆடினர். கடைசி 2 பந்துகளுக்கு 10 எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஒரு சிக்ஸ் மற்று ஒரு பவுண்ட்ரி எடுத்து சிஎஸ்கே அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார் ஜடேஜா. இதன் மூலம் ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.







