குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்கும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடமாநிலங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர்களுடன் சென்று வீடுகளை தரைமட்டம் ஆக்குவது தொடர்கதையாகி வருகிறது. இந்த புல்டோசர் நடவடிக்கை சமீப காலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும் மாநகராட்சிகள் தன்னிச்சையாக புல்டோசர் கொண்டு இடித்து வருகின்றன. இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.
இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அடிப்படை உரிமைகளை மீறுவது இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகமது ஹூசைன் என்பவரும், ராஜஸ்தானை சேர்ந்த ரஷீத் கான் என்பவரும் அளித்த மனுக்கள் கடந்த செப். 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

அப்போது, நீதிபதி விஸ்வநாதன், “இதுபோன்ற சமயங்களில் முன்கூட்டியே அவர்களுக்கு நோட்டீஸ் வழங்காமலும், பதிலளிக்க நேரம் வழங்காமலும், வீடு இடிக்கப்படும்பட்சத்தில் மற்ற ஏற்பாடுகளைச் செய்து கொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் வழங்காமல் வீடுகள் இடிக்கப்பட்டது ஏன்? சட்டவிரோதமாக கட்டுமானங்களை இடிப்பதற்கு எதிராக நான் பேசவில்லை. இதுபோன்ற விஷயங்களில் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என கூறுகிறேன்” என தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கவாய், விஸ்வநாதன் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடிக்கும் நடவடிக்கைக்கு அக்.1ம் தேதி வரை தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. எனினும், பொதுஇடம், நடைபாதை, ரயில்வே தடம் மற்றும் நீர்வழிப்பாதை ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் இந்த உத்தரவு பொருந்தாது எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.







