இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி20 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து ஒருநாள் போட்டித் தொடரானது கடந்த 10ஆம் தேதி கவுகாத்தியில் தொடங்கியது. அன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து கடந்த ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா – இலங்கை இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி 166 ரன்களும், ஷுப்மன் கில் 116 ரன்களும் எடுத்து அசத்தினர். இலங்கை அணி தரப்பில் ரஜித்தா மற்றும் குமாரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 73 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. மேலும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் மற்றும் ஒரே அணி என்ற உலக சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.







