பிரிட்டன் நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி அவரது காதலரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டனில் க்ளர்கென்வெல் பகுதியில் மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த 19 வயதான சபிதா தன்வானி என்பவர் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இறந்த நிலையில் சபிதா அவரது அறையில் இருந்து மீட்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி விசாரணையை துவக்கினர். முதற்கட்ட விசாரணையில், சபிதாவின் கழுத்து பகுதியில் பலத்த காயம் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவருடன் சமீப நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து விசாரணை நடத்தினர். இதில், அவரின் காதலன் மஹேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த போலீசார், “சபிதாவின் குடும்பத்தினருக்கு நடந்த சம்பவம் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் அவர்களின் உணர்வுகளுக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தனர்.







