இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததன் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை, உணவு, உயிர்காக்கும் மருந்து பொருட்கள், பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது. இதையடுத்து மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வெளிநாடு தப்பி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா முழுமையாக ஆதரவளித்து வருகிறது.
மேலும் இந்திய அரசு அண்டை நாடுகளின் கொள்கைகளுக்கு ஏற்ப இலங்கையில் உள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க இலங்கை அரசுக்கு 2022ம் ஆண்டு மட்டும் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது.
இவை தவிர, உணவு மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் இலங்கையில் நிலவும் பற்றாக்குறையை தணிக்ககூடிய வகையில் இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனநாயக முறைப்படி இலங்கை மக்களுடைய நலன்களில் இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement: