இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி தொடங்குவது மழை காரணமாக தாமதமாகியுள்ளது.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து தென்ஆப்பிரிக்க அணி தொடரை இழந்தது. இறுதியாக இந்தூரில் நடந்த 3-வது டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்கா 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இன்று நடக்க உள்ளது. இந்த நிலையில் மழை காரணமாக போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது மைதானத்தில் சாரல் மழை பெய்து வருவதால் மைதானத்தின் பிட்ச் “கவர்ஸ்” கொண்டு மூடப்பட்டுள்ளது. மழை குறுக்கிட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மழை நின்றபின் மீண்டும் போட்டி தொடங்கபட்டால் ஓவர்கள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.







