இந்தியாவின் சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி இன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களிடம் முதன் முறையாக உரையாற்றினார்.
இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்தியாவின் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு, இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்றார். அதன் பிறகு முதல் முறையாக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று அவர் உரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர் தனது உரையில், இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் என சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சுதந்திர தேசமாக இந்தியா தனது 75-வது ஆண்டை நிறைவு செய்கிறது. ஆங்கிலேயரின் ஆட்சியின் பிடியில் இருந்து நாம் விடுபடவும், சுதந்திர இந்தியாவில் வாழ்வதற்கு மகத்தான தியாகங்களை செய்தவர்களை இந்நேரத்தில் தலைவணங்கி வணங்குகிறேன்.
உலகின் பல்வேறு குடியரசு நாடுகளில், பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற நீண்ட போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. ஆனால், ஜனநாயகத்தின் உண்மையான திறனைக் கண்டறிய உலகிற்கு உதவிய பெருமை இந்தியாவுக்கு உண்டு. நமது நாட்டின் பெண்கள் தான் தேசத்தின் மிகப்பெரிய நம்பிக்கையான திகழ்கிறார்கள்.
இந்தியாவின் விடுதலைக்காக பாடுப்பட்ட, பல மாவீரர்களும் அவர்களின் போராட்டங்களும் குறிப்பாக விவசாயிகள் மற்றும் பழங்குடியினரிடையே மறைக்கப்பட்டன. நமது பழங்குடியின ஹீரோக்கள் உள்ளூர் அல்லது பிராந்திய சின்னங்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தேசத்தையும் ஊக்குவிப்பதால் நவம்பர் 15ம் தேதியை ‘ஜனஜாதிய கவுரவ் திவாஸ்’ ஆகக் கடைப்பிடிக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கதாகும்.
உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தனித்துவமாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசி திட்டத்தை நாம் துவக்கினோம். தற்சார்பு இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். 2047-ம் ஆண்டுக்குள் நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவை நிறைவேற்ற நாம் உறுதி பூண்டுள்ளோம் என்று கூறினார்.