ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக காவிரி ஆறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. இங்கு, ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவை உள்ளன. தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வார்கள். மேலும், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றைக் காண, சீசன் காலங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்து வரும், மழையால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து, காலை 6.00 மணி நிலவரப்படி 28,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து உயர்வால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, அருவியில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ மற்றும் படகுகளை இயக்கவோ, படகு சவாரி செய்யவோ இன்று, காலை முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பொதுமக்களின் நலன் கருதி முற்றிலும் தடை விதிக்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








