மறுமணம் மகிழ்ச்சிக்கு வித்திட்டுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 15ம் தேதி தனக்கும் அமலிக்கும் மறுமணம் நடந்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாககக் குறிப்பிட்டுள்ளார்.
விளம்பர வடிவமைப்பாளரான மறைந்த உபால்ட் – சந்திரா உபால்ட் தம்பதியரின் மகளான அமலிக்கும் தனக்கும் நடந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றதாகக் கூறியுள்ளார்.
வாழ்வின் கடினமான நேரங்களில் தனக்கு உறுதியான ஆதரவை அளித்து வரும் தனது தந்தைக்கு(டேவிட் கிருபாகர தாஸ்) நன்றி தெரிவிப்பதாக இமான் தெரிவித்துள்ளார். மறைந்த தனது அம்மாவின் ஆசி தனக்கு எப்போதும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிச்சிறந்தவரான அமளியை மறுமணம் செய்து கொள்ளக் காரணமாக இருந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ள இமான், தானும் தனது குடும்பமும் சந்தித்து வந்த நெருக்கடிகளில் இருந்து விடுபடவும், மகிழ்ச்சியாக வாழவும் இந்த மறுமணம் மிகப் பெரிய தீர்வாக இருந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
அமளியின் மகள் நேத்ரா இனி தனது 3வது மகள் என தெரிவித்துள்ள இமான், நேத்ராவின் தந்தை என்ற உணர்வு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகள்களான வெரோனிகா, பிளஸ்ஸிகா இருவரையும் பிரிந்திருப்பது வருத்தம் அளிப்பதாகவும், அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ள இமான், அவர்கள் வரும்போது, தானும் தனது குடும்பமும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் என குறிப்பிட்டுள்ளார்.
எனது இசை ரசிகர்களுக்கும் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் இசை அமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.









