தெலங்கானா மாநில தலைமைச்செயலகத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள தெலங்கானா மாநில தலைமைச் செயலகம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் கனவுத் திட்டம் என்று கூறப்படும், இந்த புதிய தலைமைச் செயலகம், 7 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ.600 கோடி செலவில் அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தலைமைச் செயலக திறப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். பிப்ரவரி 7 ஆம் தேதி, செகந்திராபாத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 30ஆம் தேதி காஷ்மீரில் ராகுலின் நடைபயணம் நிறைவுபெறும் நிகழ்விலும் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும், பாஜகவிற்கு எதிராக நாடாளுமன்ற தேர்தல் அணி சேர்க்கும் தலைவர்களின் நிகழ்வுகளில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.