ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதில், பணநாயகம் வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தெரிவித்துவிட்டு வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 77 வேட்பாளர்கள் போட்டியில் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். இது 74.79 சதவீதமாகும். இதுதவிர வாக்குப்பதிவுக்கு முன்பே 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகள் பதிவு செய்தனர்.
கடந்த 27ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கையில் 3 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 24,938 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 10,428 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த தேர்தலில் ஜனநாயகத்திற்கு பதிலாக, பணநாயகம் வெற்றி பெற்றதாக தெரிவித்துவிட்டு காரில் வேகமாக புறப்பட்டு சென்றார்.