பழனி கோயிலில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் இன்று பணியை
புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில்தனியார் நிறுவனத்தின் சார்பில்
ஒப்பந்த அடிப்படையில் 350-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து
வருகின்றனர். இந்நிலையில் இன்று பழனி மலைக்கோவிலில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் பழனி அடிவாரம் தண்டபாணி நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:-
பழனி மலைக்கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறோம். தனியார் நிறுவனத்தின் சார்பில் பழனி மலைக் கோவில் திருஆவினன்குடி பெரியநாயகி அம்மன் கோவில் உட்பட பழனி கோவிலுக்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் சுமார் 350க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிவதாகவும், நாள் கூலி அடிப்படையில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பணி மற்றும் வருங்கால வைப்புநிதி ஆகியவை என பிடித்தம் போக 2500ரூபாய் முதல் 3ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் தருவதாகவும் தெரிவித்தனர்.
எனவே சம்பளத்தை உயர்த்தவும், சம்பளம் பட்டுவாடாவை முறைப்படுத்தி கண்காணிக்கவும், இறந்த தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய தொகையை
வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தனியார் நிறுவன அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும், நடவடிக்கை இல்லை. எனவே இன்று அதிகாலை முதல் பழனி கோயிலில் பணிகளை புறக்கணித்து, முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும்
தெரிவித்தனர்.
இதையடுத்து தனியார் நிறுவன அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருகிற மே 1ம்தேதி முதல் ஊதிய உயர்வு
தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து துப்புரவு
பணியாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
—ரெ.வீரம்மாதேவி







