கரூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகன் விஜயகுமார் (வயது 30). இவர் நாமக்கலில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சௌந்தர்யா என்ற மனைவியும், சன்மதி என்ற ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளனர். பொங்கல் விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்த அவர் புலியூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு செல்வதற்காக ஸ்கூட்டியில் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துகொண்டு கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.

குளித்தலை அடுத்த லாலாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே கரூரிலிருந்து தனியார் டெக்ஸ் தொழிலாளிகளை ஏற்றிக் கொண்டு திருச்சி மாவட்டம் தும்பலம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி வந்த தனியார் பேருந்து ஸ்கூட்டியின் மீது பயங்கரமாக மோதி 50 அடி தூரம் வரை இழுத்து சென்றுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் அடியில் சிக்கி மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குளித்தலை அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் போதிய குளிர்சாதன அறை இல்லாததால் அவர்களது உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக திருப்பி அனுப்பப்பட்டது.

இந்த விபத்தினை ஏற்படுத்திய தனியார் டெக்ஸ் பேருந்து ஓட்டுநர் முருகேசன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மேலும் பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையாவிபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.