ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்ததாக தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை அயனாவரம் சபாபதி குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது உறவினர்கள் பெரம்பூர் சுப்பிரமணியம் தெரு பகுதியில் 4,500 சதுர அடி பரப்பளவில் வீடு மற்றும் காலிமனை வாங்கி அதை ரங்கநாதனிடம் ஒப்படைத்து பராமரித்து வரும்படி கூறியுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 5 கோடி எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரங்கநாதனை ஏமாற்றி பெரம்பூர் சுப்பிரமணியம் தெரு பகுதியைச் சேர்ந்த தந்தை மகன்களாகிய பன்னீர்செல்வம், செல்வநாயகம் ஆகிய இருவரும் போலி பத்திரம் தயாரித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டை அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். புகாரையடுத்து, செம்பியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்று வெளியே வந்த இருவரும் மீண்டும் தங்கள் வீட்டை ஆக்கிரமிக்க முயற்சித்ததாக ரங்கநாதன் புகார் தெரிவித்தார். புகாரையடுத்து இருவர் மீதும் மீண்டும் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.







