தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரங்களை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: அமைச்சர்

 தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரங்களை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர்,…

 தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரங்களை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ” 2 ஆம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் 3 ஆம் அலையை கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 2 ஆம் அலையின்போது மருத்துவ உள் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டது, மதுரையில் 3 ஆம் அலையை எதிர்கொள்ள முன் மாதிரியாக பைலட் திட்டம் ஒன்றை உருவாக்க உள்ளோம், எங்கெல்லாம் 3 ஆம் அலை வருவதற்கு வாய்ப்பு வரும் என ஆய்வு செய்யப்படும்” என்று தெரிவித்தார். 

மதுரை மாவட்டத்தில் 5 இலட்சம் பேருக்கு மேலாக தடுப்பூசி செலுத்தப்பட்டது, கோவின் செயலி ஒன்றிய அரசின் செயலி என்பதால் மாநில அரசிடம் தடுப்பூசி குறித்த தகவல் இல்லை. தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்கள் ஒன்றிய அரசிடம் மட்டுமே உள்ளது, யார் யாருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்கள் மாநில அரசிடம் ஒன்றிய அரசு வழங்கவில்லை என்ற அமைச்சர்,  “தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை ஒன்றிய அரசிடம் கோர உள்ளோம், மதுரையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளப்பட்ட விபரங்களை நாளை முதல் மாவட்ட நிர்வாகம் சேகரிக்க உள்ளது, தடுப்பூசி செலுத்தும் விபரங்களை அனைத்து இடங்களுக்கும் பகிர்வது தான் கூட்டாட்சி தத்துவம்” என்று கூறினார். 

மேலும், “ஒன்றிய அரசிடம் உள்ள தகவல்களை மாநில அரசுக்கு கொடுத்தால் தான் நடவடிக்கைகள் எடுக்க முடியும். யார் யார் எந்தெந்த தடுப்பூசிகளை எடுத்து கொள்ளலாம் என ஒன்றிய அரசு கூற வேண்டும், ஒன்றிய அரசு ஸ்புட்னீக் தடுப்பூசியை கொள்முதல் செய்து கொடுத்தால் மக்களுக்கு வழங்க தயாராக உள்ளோம்” என கூறினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.