சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறந்து 14 நாட்கள் ஆன நிலையில், இதுவரை 8 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இணையத்தில் முன்பதிவு செய்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். மொத்தம் 60 நாட்கள் நடைபெறும் இந்த பூஜைக் காலத்தில் முதல் நாளில் இருந்து சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
தொடர் கனமழை காரணமாக, கடந்த ஒரு சில நாட்களாக பக்தர்களின் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால், அப்போது வந்திருந்த பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமலும், வரிசையில் காத்திருக்காமலும் சாமி தரிசனம் செய்தனர். தற்போது மழை ஓய்ந்துள்ளதால், பக்தர்களின் கூட்டம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதில் கடந்த சனிக்கிழமை 73,000 பக்தர்களும், திங்கள்கிழமை மட்டும் 67,097 பக்தர்களும் தரிசனம் செய்து திரும்பியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை….எவ்வளவு தெரியுமா?
நடை திறக்கப்பட்டு 14 நாட்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை 8 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். கார்த்திகையில் வரக்கூடிய 12-ம் விளக்கு நேற்று முடிந்த காரணத்தால் இன்று முதல் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் வரக்கூடும். இதனால் போலீசார், சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை மூலமாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் கூடுதலாக 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.







