உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓட போகிறதா? என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில், தமிழகத்தில் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உள்ளிட்ட பல்வேறு விலை உயர்வுகளை திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதிக்கு நாளை முடிசூட்டு விழா நடத்துகிறார். உதயநிதி ஸ்டாலினும் அமைச்சரானால் தமிழகத்தில் தேனாறும், பாலரும் ஓடப் போகிறதா?. ஏற்கனவே தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. இவர் வந்தால் ஊழல்களுக்கு தலைவராக இருந்து செயல்படுவார். குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும். தமிழகத்தில் நான்கு முதலமைச்சர்கள் உள்ளார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி, மகன், மருமகன் ஆகியோர் இருக்கிறார்கள். ஒரு முதலமைச்சர் இருந்தாலே, தமிழ்நாடு தாக்குப்பிடிக்க முடியாது, நான்கு பேர் இருந்தால் தாக்குப் பிடிக்க முடியுமா?
குடும்ப ஆட்சிக்கும், வாரிசு அரசியலுக்கும், முடிவு கட்டுவோம். திமுக கட்சியில்லை. கார்ப்பரேட் கம்பெனி. திமுக ஆட்சிக்கு வந்து 19 மாதங்கள் முடிந்துவிட்டது. மூன்றில் ஒரு பங்கு ஆட்சி முடிந்துவிட்டது. ஆனால் மக்களுக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தனது மகன் அமைச்சராக வேண்டும் என்பதுதான் எண்ணம். நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை. மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் அப்படியே அந்தர்பல்டி அடித்துவிட்டனர். இதுதான் திமுகவின் தேர்தல் அறிக்கை.
எல்லோருக்கும் கொடுக்கமாட்டோம். தகுதியானவர்களுக்கு மட்டுமே தருவோம் என்று கூறியுள்ளார்கள். இப்படித்தான் தேர்தல் அறிக்கையில் அறிவித்தீர்களா?. வீதியில் நின்று போராட்டம் நடத்தி வருகிறோம். நம்மை வீதிக்கு கொண்டு வந்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட திட்டங்களை திமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கிறார்கள். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, வெற்றி பெற்று ஏமாற்றிவிட்டார்.
தமிழகத்தில் லஞ்சம் இல்லாத துறையே கிடையாது. இதுதான் திராவிட மாடல். வீட்டு மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகின்ற ஒரே முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின். இதற்கு முன்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது குடும்பத்தில் உள்ள நபர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று தெரிவித்தார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கும்பொழுது அரசியலுக்கு வரமாட்டேன் என்று வாக்குமூலம் அளித்தார். தற்போது அதனை காற்றில் பறக்க விட்டுவிட்டனர்.
பல்வேறு துறைகள் மூலம் ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ்
மூலமாக வெளியிடுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்திற்கு திரைப்படத்தை கொடுக்காவிட்டால், அந்தப் படத்தை வெளியிட விடுவதில்லை. ஊழல் கருப்பு பணத்தை எல்லாம், வெள்ளை பணமாக மாற்றுவதற்கு அவரது நிறுவனம் மூலமாக திரைப்படத்தை வாங்கி வெளியிட்டு வருகிறார்கள்.
அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரும் ஒற்றுமையாக, ஒன்றாக தான் உள்ளனர். அதிமுகவை எவராலும் தொட்டுப் பார்க்க முடியாது. அதிமுகவை அழித்துவிடலாம் என்று ஒருபோதும் நினைத்து பார்த்து விடாதீர்கள். வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டே இருக்கும் அதிமுக இயக்கத்தை, ஒற்றுமையாக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்திக் கொண்டுள்ளோம். அதிமுகவின் பலத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பீட்டு விடாதீர்கள். அதிமுகவின் தொண்டன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். உழைப்பால் வளர்ந்த கட்சி எப்பொழுதும், மக்களைக் காக்கக்கூடிய கட்சி, அதிமுக கட்சி தான். அதிமுக உயிரோட்டம் உள்ள கட்சி. எவராலும் அசைக்க முடியாது. பொய்வழக்கு போட்டு அதிமுகவை முடக்கிவிடலாம் என்று நினைத்து விடாதீர்கள். எத்தனை வழக்குகள் வந்தாலும் அதை சட்ட விதிகளின்படி எதிர்கொள்வோம்.
அதிமுகவில் தொண்டன் தான், கட்சியை வழிநடத்த முடியும். பொறுப்புக்கு வர முடியும். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்குபார்த்தாலும் கொள்ளை, கொலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. மோசமான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழக முதல்வர் சூப்பர் முதலமைச்சராம். வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு தகுந்த சவுக்கடி கொடுக்க வேண்டும். அதிமுக மிகப்பெரிய வெற்றிபெறும். வீட்டு மக்களை விட்டுவிட்டு, நாட்டு மக்களை பாருங்கள். நம்பி வாக்களித்த மக்களுக்கு தமிழக முதல்வர் துரோகம் செய்ய வேண்டாம்.
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பேச நான் தயார். அதேபோன்று திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் விவாதிக்க வாருங்கள் என்றால் வரவில்லை. திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டிருந்தால் மட்டுமே வர முடியும். தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமையும். தமிழகத்தில் நடக்காததை நடந்ததுபோல் சித்தரிக்கும் முதல்வர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான். ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வரின் காரின் வெளியே தொங்கிக்கொண்டு செல்கிறார். பார்க்கும்பொழுது வேதனையாக உள்ளது.
அரசு அதிகாரிகள் தங்களது உரிமைகளை சரியாக பயன்படுத்தவேண்டும், திமுக ஆட்சிக்கு அடிமைத்தனமாக இருக்கவேண்டாம் என்றார். மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக் அடிக்கும். ஆனால் தற்போது மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷேக் அடிக்கும். இதற்கு தமிழக மக்கள் தகுந்த பதிலடி வருகின்ற தேர்தலில் கொடுக்கவேண்டும். தமிழகம்
முழுவதும் ஒரே ஒரு குரல் ஒலித்து கொண்டுள்ளது. அந்தக் குரல் திமுக ஆட்சி எப்பொழுது போகும் என்பது தான்” என்று பேசினார்.







