பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்கள், மாணக்கர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்களின் வருகை பதிவேற்றம் செய்வதற்கு என உருவாக்கப்பட்டுள்ள செயலி அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடைந்து வந்தனர்.
அதனால் நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியர்களுக்கு சிரமங்களும் கால விரையமும் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த மே மாதம் 25ஆம் தேதியன்று ஆசிரியர்கள் தங்களது மொபைல் போனில் உள்ள பள்ளி கல்வித்துறை செயலி மூலம் விடுப்பு எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.
இந்த இணைய செயலி மூலம் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விடுப்புகளுக்கு அனுமதி கோருதல் போன்றவற்றை ஆசிரியர்கள் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்த செயலியானது கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் போனில் TNSED-Schools என டைப் செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த செயலியை பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்துமாறு மாவட்ட கல்வித்துறை சார்பாக பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் நடைமுறைக்கு வரும் திட்டம். காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.








