முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால், செந்தில் பாலாஜிக்கு சிறிது காலம் பதவி கொடுக்காமல் காத்திருக்க சொல்லியிருப்பேன் என ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ண இன்று கோவைக்கு வருகை தந்தார். அவருக்கு பாரதிய ஜனதா கட்சியினர் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது;
பிரதமர் நரேந்திர மோடி தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளார். அதனால் தான் 3 தமிழர்கள் 4 மாநிலங்களில் கவர்னர்களாக இருக்கின்றனர். இது தனிப்பட்ட கட்சிக்கு கிடைத்த பெருமையாக நாங்கள் கருதவில்லை. இது தமிழ் இனத்துக்கே கிடைத்த பெருமையாக கருதுகிறோம். ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு ஜார்கண்ட் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு , அந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு முதல் முறையாக தமிழகத்திற்கு வருகை புரிந்திருக்கிறேன்.
ஆளுநர்களின் செயல்பாடு மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளை பொறுத்து அமைந்துள்ளது. ஆளுநர் என்பவர் ஏதோ அதிகாரம் செய்ய வந்ததாக நினைக்கக்கூடாது. அரசியல் சட்டத்தின் படி மாநில அரசு செயல்படுவதை ஆளுநர் உறுதிபடுத்துகின்றார்.
மணிப்பூர் கலவரத்தை பொறுத்தவரையில், அங்கு ஒற்றுமைக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இப்பொழுது படிப்படியாக கலவரம் கட்டுப்படுத்தபட்டு வருகின்றது. கலவரத்தை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதை அரசியலாக்காமல் அமைதியை ஏற்படுத்த வேண்டும்.
யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால், கண்டிப்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிறிது காலம் பதவி கொடுக்காமல் காத்திருக்க சொல்லியிருப்பேன். உங்கள் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் மீண்டும் இணைத்து கொள்கிறேன் என்று சொல்லி இருப்பேன். அதுதான் சரியான அரசியல் நடத்துவதற்கு உதவும். இதை தனி நபரின் மீது எடுக்கும் நடவடிக்கையாக பார்க்க கூடாது. மேலும் பொது சிவில் சட்டம் என்பது இந்து சட்டமல்ல. அது அனைவருக்கும் பொதுவான சட்டம் ஆகும். இதை அனைவரும் ஆதரிக்க வேண்டும். இது சமுதாயத்தை ஒருமைபடுத்தும்.
இவ்வாறு ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா உடனிருந்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா








