தமிழ்நாட்டில் வரும் 9ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் வரும் 9ஆம் வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 07 முதல் 09 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி 18செமீ மழையும் , கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லாறில் 15செமீ மழையும், வால்பாறை PTO , மேல் பவானி ஆகிய இடங்களில் தலா 10 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.