விவசாயிகளை முதலாளியாக்குவதே தமிழக அரசின் லட்சியம் எனவும், அதிகாரிகள் தங்களது பணிகளை சரியாக செய்யவில்லை என்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தருமபுரியில் வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு உணவுப் பதப்படுத்தும் தொழில்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்த மண்டல அளவிலான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். முன்னதாக இந்நிகழ்ச்சியை, தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு விவசாயிகள் வைத்திருந்த கண்காட்சியையைத் திறந்துவைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், நிகழ்ச்சியைத் துவக்கிவைத்துப் பேசிய அவர், தமிழக விவசாயிகள் நலனுக்காக தமிழக முதல்வர் தனி பட்ஜெட் ஒதுக்கி உள்ளார். காவிரி உபரி நீர் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்திற்கு ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த திட்டம் தருமபுரிக்கு கொண்டு வந்தால்
தருமபுரி மாவட்டம் விவசாயத்தில் செழிக்கும். மேலும், விவசாயம் செய்யும்
பொருட்களை மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றி விவசாயிகள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். விவசாயிகளைத் தேர்வு செய்து அவர்களை முதலாளியாக்குவதே எங்களுடைய லட்சியம். எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் பிரசாரத்தில் திமுகவைப் பற்றி எதிர்மறையான கருத்துகளைப் பேசி வந்தர்கள்.
தற்போது விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திமுக அரசைப் புகழ்கின்றனர். மேலும், விவசாயத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களது பணிகளை சரியாக செய்யவில்லை என்றால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை செய்தார். பிறகு 54 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை விவசாயிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
-ம.பவித்ரா