பெரம்பலூரில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடந்த 20 வருடமாக யாருடைய ஆதரவும் இல்லாமல் போராடி வருகிறார் 70 வயதான நல்லம்மாள் என்ற மூதாட்டி.
20 வருடமாக அரசு இயந்திரத்தை அசைத்து பார்க்க நினைக்கும் மனஉறுதி. உயிரே போனாலும் ஏரி ஆக்கிரமிப்பை மீட்டே தீருவேன் என்ற திடம் என நாம் பார்ப்பது நன்னை நல்லம்மாள். 70 வயதான இவர் 2001 முதல் நன்னை பெரம்பலூர் மாவட்டம் நன்னை கிராமத்தில் உள்ள ஏரிஆக்கிரமிப்பை மீட்கபோராடி வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கணவர் பிள்ளைகள் என எவரும் இல்லாத சூழலில் விவசாய கூலி வேலை பார்த்து வரும் நல்லம்மாள் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற ஏறாத அலுவலகம் இல்லை, கொடுக்காத மனுக்கள் இல்லை என்றே சொல்லலாம். ஆம் இது வரை 200 மனுக்கள் கொடுத்து அவரது கோரிக்கையை தொய்வில்லாமல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் நல்லம்மாள். ஏரியை ஆக்கிரமித்து 50க்கும் மேற்பட்டோர் வீடுகளை கட்டியுள்ளனர் என்று புகார் கூறும் நல்லம்மாள் அவற்றை இடித்து விட்டு நீர்நிலையை காக்கவேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
மாவட்ட ஆட்சியரே சில நேரங்களில் எனது மனுவை வாங்க மறுப்பதாக கூறும் நல்லம்மாள், இறுதி மூச்சுவரை போராட்டத்தை கைவிட போவதில்லை என்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டு வரும் நிலையில் நன்னை ஏரி ஆக்கிரமிப்பை மட்டும் ஏன் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்கிறார் நல்லம்மாள்.
கோரிக்கை மனுக்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதும் சில சமயங்களில் அங்கேயே படுத்துறங்கி செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ள நல்லம்மாள் தன்னுடைய கோரிக்கைக்கு பதில் தெரிய வேண்டும் என்கிறார்.
நல்லம்மாளின் கோரிக்கை குறித்து குன்னம் வட்டாட்சியர் அனிதாவிடம் கேட்டபோது, நல்லம்மாள் கூறுவது போல் அது ஏரி ஆக்கிரமிப்பு இல்லை என்றும் சம்மந்தப்பட்ட பகுதி நத்தம் புறம்போக்கு என்றும் அதற்கெல்லாம் ஏற்கனவே பட்டா கொடுத்தாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பகுதியில் இருந்த அவரின் உறவினர் வீட்டை இடித்துவிட்டதால் நல்லம்மாள் போராடிவருவதாகவும் வட்டாட்சியர் அனிதா தெரிவித்துள்ளார்.
தள்ளாத வயதிலும் தளராத நம்பிக்கையுடன் கோரிக்கை மனுக்களுடன் நடையாய் நடந்து வரும் நல்லம்மாளின் கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.