மதுரையை சிட்னியாக மாற்றுவேன் என்று கூறியதை நிச்சயம் செய்து காட்டுவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் மூன்றாவது முறையாக தமிழக கூட்டுறவு துறை அமைச்சரும் மேற்கு தொகுதி வேட்பாளருமான செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பொன்மேனி, சொக்கலிங்க நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில், பகுதி மக்களுக்கு குடிநீர் பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் மேற்கு தொகுதியில் 9 மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், 50 கோடி மதிப்பீல் காளவாசல் மேம்பாலம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வாக்களித்த மக்களுக்கு நன்றியுடன் இருப்பதாகவும் தொகுதி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் மதுரையின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன் என்றும் கூறினார். பின்னர், தான் கூறியது போல இன்னும் ஒரு வருடத்தில் மதுரை நகரை சிட்னி நகரமாக மாற்றுவேன் என்று சொன்னதை செய்து காட்டுவேன் என்று தெரிவித்தார்







