ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் விருப்ப மனு கொடுத்துள்ளார்.
ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைதொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதில் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, தங்களது வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டத்தை சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடத்தியது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து துறை நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இ வி கே எஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தார். பின்னர் கட்சித் தலைமை தான் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் என்று சஞ்சய் சம்பத் தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் அவர்களும் கலந்துகொண்டு, குண்டுராவ் அவர்களை சந்தித்து வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் ராஜன் அவர்கள், முதல் முறையாக சத்திய மூர்த்தி பவனில் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்வை சந்தித்ததில் மிக்க சந்தோஷம். சிறப்பாக செயல்பட்டு வந்த திருமகன் ஈ வே ரா எதிர்பாராத விதமாக இறந்தது வருத்தம். காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் இடம் அளித்ததற்கு திமுகவிற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி.எனக்கு கட்டாயமாக வேட்பாளராக போட்டியிட இடம் வேண்டும் என்று கேட்டுள்ளேன். காங்கிரசை வளர்க்க நான் நிறைய இழந்துள்ளேன். நான் கட்சிக்கு வேலை செய்யவில்லை என்று யாராலும் என்னை சொல்ல முடியாது. 2021 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் நெசவாளர்களை சந்திக்க ஏற்ப்பாடு செய்தேன். கட்சி அறிவித்த அனைத்து பொறுப்புகளிலும் சிறப்பாக செயல்பட்டு உள்ளேன். எனக்கு தாய் தந்தை இருவரும் கிடையாது என கண் கலங்கி நான் கடினமாக இந்த காங்கிரஸ் கட்சிக்காக உழைத்துள்ளேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் தினேஷ் குண்டுராவிடம் நான் என்னுடைய கோரிக்கையை அளித்துள்ளேன். நானும் இளைஞன் தான். திருமகன் ஈவேரா விட்டு சென்றதை நான் சிறப்பாக செய்வேன். உழைத்தவர்களுக்கு கண்டிப்பாக இடம் அளிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். கண்டிப்பாக செய்வார்கள் என்று நம்புகிறேன்நான் கோரிக்கை வைத்ததும் இதை பரிசீலிக்கிறேன் என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.நான் உழைத்திருக்கிறேன் என்று தான் சொல்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் ஒருவேளை சஞ்சய் சம்பத்துக்கு இடம் அளிக்கப்பட்டால் உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, பதிலளித்த மக்கள் ராஜன் , தலைமை அறிவிக்கட்டும் அதன் பின் உங்களை சந்திக்கிறேன்.கிழக்கு சட்டமன்றம் என் சொந்த தொகுதி. திமுக மாஸ் தான் அணிந்துள்ளார்கள். பின்னால் இருப்பது ஆர் எஸ் எஸ் தான். தலைமை எடுக்கும் முடிவு எனக்கு சாதகமாக இருக்கும் என்றுதான் நம்புகிறேன் என்று கூறினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டராவ், இந்த இடைத்தேர்தல் தொடர்பாக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். வேட்பாளர் தேர்வு குறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும். இடைத்தேர்தலுக்கு ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட வாய்ப்பில்லை. கட்சிகள் வேட்பாளர் தேர்வில் பெரிய குழப்பங்கள் நடந்து வருகிறது. அதனால் யார் வேட்பாளர் என்பதை இன்னும் தேர்வு செய்யவில்லை. விரைவில் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.
- பி. ஜேம்ஸ் லிசா