கதாநாயகனாக நடிப்பதன் மூலம் சமூகத்திற்கு நல்ல தகவல்களை கொடுக்க முடிவதால் வில்லனாக நடிப்பதை தவிர்த்து வருகிறேன் என்று நடிகர் அருண் விஜய் தெரிவித்தார்.
நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடித்து, வரும் 19 ம் தேதி வெளியாக உள்ள ‘ சினம்’ என்ற புதிய திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சேலம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய் இன்று சேலம் தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், சினம் திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்ப்பாட்டம் இல்லாமல், யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளேன்.

எனது முந்தைய திரைப்படம் யானைக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு போல இந்த திரைப்படத்திற்கும் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. கதாநாயகனாக நடிப்பதன் மூலம் சமூகத்திற்கு நல்ல தகவல்களை கொடுக்க முடிவதால் வில்லனாக நடிப்பதை தவிர்த்து வருகிறேன் என்று தெரிவித்தார்.
மேலும், புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட முடியாத அளவுக்கு தொழில்நுட்பங்கள் தேவை. ரொமான்ஸ் மற்றும் காமெடி கலந்த ஜாலியான திரைப்பட வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். மணிரத்தினம், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரொமான்ஸ் படங்கள் நடிக்க விருப்பம் உள்ளது என்றும் கூறினார்.







