நாட்டின் முக்கியமான ஒரு மாவட்டத்தில் தனது மகன் ஆட்சியராக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடியிடம் வேட்புமனுவை பெற்ற தென்காசிக்காரரின் தந்தை சுப்பையா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக பிரதமர் மோடி நேற்று (மே 14) தனது வேட்புமனு தேர்தல் நடத்தும் அதிகாரியான எஸ்.ராஜலிங்கம் என்பவரிடம் தாக்கல் செய்தார். வாரணாசி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான எஸ்.ராஜலிங்கம் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர்.
திருச்சி என்ஐடியில் பொறியியல் பட்டம் பெற்றவர் எஸ்.ராஜலிங்கம். இவரது தந்தை வங்கி மேலாளாராக பணியாற்றியவர். தாய் கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலராக இருந்தவர். இவர், கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று ஐபிஎஸ் அதிகாரியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பணியில் சேர்ந்துள்ளார். தொடர்ந்து, 2009-ம் ஆண்டு மற்றொரு முறை சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று உத்தரப்பிரதேச மாநிலத்திலேயே மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.
மக்களிடையே திறமையான அதிகாரியாக பேசப்பட்டு வரும் ராஜலிங்கம் பிரதமர் மோடியின் தொகுதியும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோயில் நகரமுமான வாரணாசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக கடந்த 2022-ம் ஆண்டு பொறுப்பேற்றார். பிரதமர் மோடியிடம் அவர் வேட்பு மனுவை பெற்ற நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி தென்காசி மாவட்ட மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது.
இந்நிலையில், வாரணாசி மாவட்ட ஆட்சித் தலைவரான எஸ்.ராஜலிங்கத்தின் தந்தை சுப்பையா இதுகுறித்து கூறியதாவது,
“எனது மகன் நாட்டின் முக்கியமான ஒரு மாவட்டத்தில் ஆட்சியராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் வாரணாசி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின் வாரணாசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடங்கியுள்ளார். இதனால், வாரணாசி நகரமே தூய்மை மிக்கதாக மாறியுள்ளது. ராஜலிங்கத்தால் தமிழ்நாடும், கடையநல்லூர் பகுதி மக்களும் பெருமை கொள்வதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்களாகிய நாங்களும் பெருமை கொள்கிறோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.







