கருணாநிதி வசனத்தில் நான் நடித்த காட்சி; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்த தகவல்

கருணாநிதி கதை வசனத்தில் தான் நடித்த படம் குறித்த தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்துகொண்டார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பாக கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கும் விழா சென்னை…

கருணாநிதி கதை வசனத்தில் தான் நடித்த படம் குறித்த தகவலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்துகொண்டார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பாக கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருது வழங்கும் விழா சென்னை தி.நகர் வாணி மஹாலில் இன்று நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்ட எழுத்தாளர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் பொற்கிழி விருது வழங்கினார்.

2020 ஆண்டுக்கான விருதுகள் உரைநடை – முருகேச பாண்டியன், நாடகம்- அ.மங்கை, கவிதை – அறிவுமதி, நாவல் – பொன்னீலன், பிற இந்திய மொழி (கன்னடம்)- சித்தலிங்கையா, ஆங்கிலம் – ஆர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 2021ஆம் ஆண்டுக்கான விருதுகள் உரைநடை – எஸ்.ராமகிருஷ்ணன், நாடகம் – வெளி ரங்கராஜன் , கவிதை- அபி , நாவல்- ராசேந்திர சோழன் , பிற இந்திய மொழி (காஷ்மீரி) – நிகத் சாஹியா, ஆங்கிலம் – மருதநாயகம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

விழாவில் உரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நானும் 2 புத்தகம் எழுதியுள்ளேன், உலக மேயர் மாநாட்டை கூட தொடங்கி வைத்திருக்கிறேன். ஆனால் இன்று இந்த 12 அறிஞர்களுக்கு விருது கொடுத்தது மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

பொன்னாடை, பூங்கொத்துக்கு பதில் புத்தகங்களைப் பரிசாக கேட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எனக்கும் 5 மாதத்தில் 2,000 புத்தகம் வந்துள்ளது.பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் நம்பிக்கையை புத்தகம் பரிசு என்ற அறிவிப்பு மூலம் முதலமைச்சர் உருவாக்கி உள்ளார் என்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுவையான சம்பவம் ஒன்றையும் பகிர்ந்துகொண்டார். மேலும், “கண்ணம்மா திரைப்பட க்ளைமாக்ஸ் காட்சியில் கருணாநிதியின் வசனத்தில் நடித்த காட்சி மற்றும் டப்பிங் பேச வைத்தது அவருடன் எனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது” என்றும் தனது பேச்சில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.