ஹைதராபாத் என்கவுன்ட்டர் போலியானது – விசாரணை ஆணையம் அதிர்ச்சி தகவல்

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நான்கு பேரை போலியாக என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஹைதராபாத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பெண் மருத்துவர்…

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நான்கு பேரை போலியாக என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஹைதராபாத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து, என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த என்கவுன்ட்டர் குறித்த விரிவான விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கென உச்ச நீதிமன்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி  அமைக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணை ஆணையத்தை 2019ஆம் ஆண்டு டிசம்பரில் அமைத்து, 6 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு, மூன்று முறை கால அவகாச நீட்டிப்பை விசாரணை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க விசாரணை ஆணையம் மேலும் கால அவகாசம் கோரியது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மேலும் 6 மாத கால அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.

 

இந்நிலையில், விசாரணை ஆணையம் தற்போது 500க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், அந்த 4 பேரையும் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் என்கவுன்ட்டர் செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், என்கவுன்ட்டர் செய்த 10 காவலர்கள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.