கணவர் அவரது தாய்-க்கு நேரத்தையும், பணத்தையும் செலவிடுவதாக மனைவி குற்றம் சாட்டிய நிலையில், அதனை குடும்ப வன்முறையாக கருத முடியதாது என்று கூறி அப்பெண்ணின் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில செயலகத்தில் உதவியாளராக பணிபுரியும் பெண் ஒருவர், தான் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு, நிதியுதவி, இழப்பீடு கோரியும் புகார் மனு அளித்திருந்ததார். மேலும், அவர் அந்த மனுவில் தனது கணவர், வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும், அவர் விடுமுறையில் வீட்டிற்கு வரும் போது, அவரின் தாயுடன் நேரத்தை செலவிடுவதாகவும், அவருக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தனது மாமியார் மற்றும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களால் துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஆனால் அவரின் குடும்ப உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து விட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி ஆஷிஷ் அயாசித், தனது தாய்க்கு நேரத்தையும், பணத்தையும் செலவிடுவதை குடும்ப வன்முறையாக கருத முடியாது என குறிப்பிட்டார். அதனுடன், அந்த பெண் தெரிவித்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், மனுதாரர் வேலையில் இருப்பவர், மாத ஊதியம் பெறுகிறார் என்பதையும் சுட்டிக்காட்டிக் அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.








