இலங்கைக்கு தமிழ்நாடு உதவுவது குறித்த கோரிக்கையை ஏற்றதற்காக மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி நிலவுவதால் அங்குள்ள மக்கள் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களையே வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், அங்கு நிலவி வரும் கடும் விலை உயர்வால் அன்றாட வாழ்கையை தொடர முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனை எதிர்த்து அங்கு பல போராட்டங்களும் நிலவி வந்தது. இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு பிற நாடுகள் தந்து உதவிக்கரங்களை கொடுத்தது. இந்நிலையில், இதேபோல் தமிழ்நாடு சார்பாக இலங்கைக்கு உதவிகளை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.
இந்த கோரிக்கைக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு விரும்பினால் இலங்கையில் பொருட்களை விநியோகம் செய்யும் பணிகளை ஒருங்கிணைக்க தலைமைச் செயலாளரை அனுப்பி வைக்கலாம் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
https://twitter.com/mkstalin/status/1521026759424061441
இந்நிலையில், இந்த கடிதத்தை பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழ்நாட்டின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தனிப்பட்ட நன்றி என குறிப்பிட்டுள்ளார். இந்த மனிதாபிமான நடவடிக்கை அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும் எனக்கூறியுள்ள அவர், இருநாடுகளுக்கு இடையே அரவணைப்பு மற்றும் நல்லுறவை மேம்படுத்த இந்த மனிதாபிமான முயற்சி உதவும் என தெரிவித்துள்ளார். மேலும், அனைத்துத் துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.







