மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
50 சதவீதத்துக்கு மிகாமல் மாநில இட ஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்த நிலையில், அதை மீறும் வகையில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது எப்படி?? என திமுக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
கடந்த 1986 முதல் 50% ஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையில், கடந்த 1993-ல் 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு கொண்டு வந்த பிறகு, அதை பின்பற்ற வேண்டும் என யாரும் கோரிக்கை வைக்கவில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை 18ம் தேதி பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.







