நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் காட்டு யானைக் கூட்டம் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளதால் தேயிலை தோட்ட பணியாளர்கள், வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளது. இதனால் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைக் கூட்டம் குட்டிகளுடன் தட்டப்பள்ளம், முள்ளூர், மாமரம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு உள்ளது. அவ்வாறு முகாமிட்டுள்ள காட்டு யானைகள் பகல் நேரங்களில் தேயிலை, காஃபி தோட்டங்களில் முகாமிடுவதுடன் சில சமயங்களில் பிரதான சாலையான கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உலா வரத்தொடங்கி உள்ளது.
இதனால் தேயிலை தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் மற்றும் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். எனவே தற்போது தட்டப்பள்ளம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைக் கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.







