சென்னையில் பெய்த கனமழையால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்து கொண்டிருந்தன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகல் 3.30 மணியில் இருந்து திடீரென கரும் மேகங்கள் சூழ்ந்து கொண்டு, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாலை 4.20 மணிக்கு பெங்களூரில் இருந்து 74 பயணிகளுடன் சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாததால் பெங்களூருக்கே திருப்பி விடப்பட்டது. வானிலை சீரானதும் சென்னை வரும் என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க வந்த விமானங்கள் தரை இறங்க முடியால் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன. திருச்சி, புனே, கொல்கத்தா, டெல்லி, மதுரை, பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 6 விமானங்கள் தரையிறங்காமல் நீண்ட நேரமாக வானில் வட்டம் அடித்து பறந்து கொண்டு இருந்தன. மழை நின்றதும் விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின.
சென்னையில் மழையால் 13 விமான சேவைகள் தாமதமானது. மேலும் பெங்களூரூ விமானம் தரையிறங்க முடியாததால் பெங்களுருக்கே திருப்பி விடப்பட்டது. அதுப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விசாகப்பட்டினம், கவுகாத்தி, கொல்கத்தா, கோவை, டெல்லி, மதுரை, இலங்கை ஆகிய 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.







