குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு சில நாட்களாக காலை நேரங்களில் வெயில் வாட்டி வந்தாலும் மதிய நேரங்களில் மட்டும் மிதமான மற்றும் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நள்ளிரவு 1 மணி முதல் விடிய விடிய கனமழையானது கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோடு, தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குமரியில் இருந்து கடற்கரை மார்க்கமாக கேரளா செல்லும் முக்கிய சாலையான மேற்கு கடற்கரை சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் அந்த பகுதி வழியாக செல்லும் பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் நீந்திய படி சென்று வருகின்றன.
மேலும் இந்த பகுதியில் மழைநீர் வடிகால் ஓடைகள் இல்லாததால், மழை பெய்யும் போது உயர்வான பகுதிகளில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர் சாலையிலும், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் குளம்போல் தேங்கி நிற்கும் அவலம் தொடர்கதையாக இருந்து வருவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சாலையில் தேங்கி நிற்கும் இந்த மழை நீரானது அருகில் உள்ள ஏலாக்கரை, பாணந்தோப்பு பகுதிகளுக்குள் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள்ளும் புகுந்து பலத்த சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளையும், உடமைகளையும் விட்டுவிட்டு பாதுகாப்பு தேடி உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இங்கு தொடர்ச்சியாக தண்ணீர் தேங்குவதை தடுக்க மாவட்ட நிர்வாகத்திடமும், நகராட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நிரந்தர தீர்வும் எடுக்கப்படவில்லை எனவும், வரும் காலங்களில் இந்த பிரச்னைக்கு தீர்வுக்காண தேவையான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.