வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஏப். 25) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 30-ம்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வட தமிழகத்தின் உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 9 டிகிரி, அதாவது 108 டிகிரி வரை, 26, 27, 28-ம் தேதிகளில் வழக்கத்தைவிட 7 டிகிரி வரை, அதாவது 106 டிகிரி வரை உயரக்கூடும். இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக் கூடும்”
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக ஈரோடு, வேலூர் ஆகிய இடங்களில் தலா 107 டிகிரி, திருப்பத்தூர், சேலம், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் தலா 106 டிகிரி, தருமபுரி, திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில் தலா 105 டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரி, கோவை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, சென்னை விமான நிலையம், மதுரை மாநகரம் ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி, பாளையங்கோட்டையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.