“அடுத்த 5 நாட்களுக்கு உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்” – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு  உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே…

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு  உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.  பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும்.  ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து உள்ளது.

அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது.  தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேலாக பதிவாகி வருகின்றது.  அனல் காற்று வீசுவதினால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : “மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்” பட்டம் பெற்ற 60 வயது பெண்!

இந்நிலையில்,  இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு  தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது :

“தமிழ்நாடு உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.  வட தமிழ்நாட்டின்  உள் மாவட்டங்களில் மே 1 வரை அதிகபட்ச வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலும்,  இதர தமிழ்நாடு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-39 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.  மேலும், வெப்பநிலை தகிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்”
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.