கொரோனா மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி விநியோகம் தடையின்றி நடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அக்சிஜன், தடுப்பூசி மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் வந்தது
அப்போது, தமிழக அரசு சார்பில் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 5 லட்சம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 12 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், 5 ஆயிரத்து 592 படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை நகரங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழக அரசு, 12 மாவட்டங்களில் சித்தா, ஆயுர்வேதா சிகிச்சை மையங்கள் துவங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
475 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை உள்ள நிலையில் 419 மெட்ரிக் டன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வரும் நாட்களில் 800 மெட்ரிக் டன் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. வரும் 15ம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி துவங்கும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் வழங்கினர். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்து விநியோகம் தடையின்றி நடைபெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதால், டிஆர்டிஓ மூலம் ஆக்சிஜன் உற்பத்தி வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் கொரோனா மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால், அரசு எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்தி ருந்தது. விசாரணை மே 12ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.