ஹாய் நான்னா திரைப்படம் உண்மையாகவே மனதினை தொட்டுவிட்டது என தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் பாராட்டியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் நானி. நானியின் 30வது திரைப்படமான ‘ஹாய் நான்னா’ திரைப்படம் டிசம்பர் 7-ம் தேதி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியானது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை மிருணாள் தாகூர் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வாஹப் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் மீது, ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் ஹாய் நான்னா படத்தினை பாராட்டி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“ஹாய் நான்னா படக்குழுவுக்கு வாழ்த்துகள். என்ன அருமையான படம். உண்மையாகவே மனதினை தொட்டுவிட்டது. சகோதரர் நானியின் அலட்டல் இல்லாத நடிப்பு. இந்த மாதிரியான கதைகளுக்கு ஓக்கே சொல்லி திரைக்கு கொண்டு வருவதற்கு நானி மீது மிக்க மரியாதை ஏற்படுகிறது. மிருணாள் உங்களது இனிமை திரையினை ஆட்கொள்கிறது.
குழந்தை நட்சத்திரம் பேபி கியாராவின் க்யூட்னஸால், இதயத்தை உருகவைத்தாய். போதும்! தற்போது பள்ளிக்குச் செல். (சிரிப்பு எமோஜியுடன்) சிறப்பாக நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் வாழ்த்துகள். குறிப்பாக ஒளிப்பதிவாளர் வர்கீஸ், இசையமைப்பாளர் அப்துல் வஹாப்க்கு பாராட்டுகள். இயக்குநர் ஷௌர்யும் உங்களது முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்துவிட்டீர்கள்.
https://twitter.com/alluarjun/status/1734091650551427152
இதயத்தை தொடும், கண்ணீரை வரவழைக்கும் பல கணங்களை உருவாக்கியுள்ளீர்கள். வண்ணமயமாக படத்தினை எடுத்துள்ளீர்கள். நீங்கள் மேலும் ஒளிர்க. ரசிகர்களுக்கு இந்தப் படத்தினை கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. தந்தைகளை மட்டுமின்றி குடும்பத்திலுள்ள அனைவரது இதயத்தையும் ஹாய் நான்னா தொட்டுள்ளது.” எனக் கூறியுள்ளார்.







