குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த 2019-ஆம் ஆண்டு, டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியானபோது ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள், முதல் நூறு இடங்களில் இடம்பெற்றது தெரியவந்தது.
இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில், சிபிஐ விசாரித்தால் முறைகேடு தொடர்பாக கண்டறிய இயலும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், சிபிசிஐடி காவல்துறையினர் தங்கள் வசமுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமெனவும், சிபிஐ காவல்துறையினர் நேர்மையாகவும் விரைவாகவும் விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.









