ஜனநாயக நாட்டில் மன்னரைப் போல் திமுக ஆட்சி நடைபெறுகிறது. தாத்தா, பிள்ளை, பேரன் என ஆட்சி நடத்துகிறார்கள். இது தான் திராவிட மாடலா? என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விக்கிரவாண்டி பேருந்து நிலையம் எதிரில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் திமுக ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், “மக்களை பற்றி சிந்திக்காமல் தன் குடும்பத்தினை மட்டும் சிந்தித்து கொண்டிருக்கும் திமுகவின் செயலபடாத முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளில் ஸ்டாலின் என்ன செய்திருக்கிறார் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டாலும் பரவாயில்லை, மக்களை துன்பப்படுத்தும் அரசாக திமுக உள்ளது. நாள்தோறும் பொம்மைக்கு கீ கொடுத்தது போல ஸ்டாலின் செயல்படுகிறார். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென தேர்தல் நேரத்தில் அறிவித்தார்கள். அதன்பின் அதனை பற்றி பேசவுமில்லை. நிறைவேற்றவும் இல்லை. தமிழகத்தில் 26 சதவிகிதம் கமிஷன் ஆட்சி தான் நடைபெறுகிறது. அமைச்சர்கள் யாரும் அமைச்சராக இருப்பதில்லை.
விவசாயிகள், மக்களை பற்றி கவலையில்லாத அரசாக திமுக உள்ளது. இறப்பதற்கு முன்பு, தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு சென்றவர்தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. கடைசியாக தாலிக்கு தங்கம் திட்டத்தில் அரை சவரனை 1 சவரனாக மாற்றிக் கொடுத்தார். திமுக ஆட்சியில் சிமெண்ட் விலை, மூட்டைக்கு 520 ரூபாய் உயர்ந்துள்ளது. ஏனென்றால் திமுகவின் பினாமி குடும்பத்தினர் சிமெண்ட் கம்பெணியை நடத்துகின்றனர். இதில் வரும் கமிஷன் நேரடியாக ஸ்டாலின் குடும்பத்திற்கு தான் செல்கிறது.
திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள், ஒன்றிய செயலாளர்களின் வீட்டில் அமர்ந்திருக்கக்கூடிய சூழல் தான் நிலவுகிறது. வாக்களித்த மக்களை திமுக அரசு வஞ்சித்து கொண்டிருக்கிறது. வீட்டு வரி உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சொல்வது ஒன்று. செய்வது ஒன்றாக உள்ளது. மின்கட்டண உயர்வால் சிறு, குறு தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விலைவாசி உயர்ந்துள்ளதை கட்டுப்படுத்த எந்த திட்டமும் திமுக அரசிடம் இல்லை. எதை பற்றியும் சிந்திக்காமல், நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், கனவு உலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார்.
ஜனநாயக நாட்டில் மன்னரைப் போல் திமுக ஆட்சி நடைபெறுகிறது. தாத்தா, பிள்ளை, பேரன் என ஆட்சி நடத்துகிறார்கள். இது தான் திராவிட மாடலா? திமுக ஆட்சியில் எது நடக்குறதோ இல்லையோ எல்லா இடத்திலும் கஞ்சா கிடைக்கிறது. இது திராவிட மாடல் அரசு இல்லை. திமுக அரசை குறை சொல்லவேண்டும் என்று கூறவில்லை. இன்றைக்கு தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது.
பள்ளி வளாகங்களில்கூட கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. திமுக, பணம் இருந்தால் ரத்தத்தையும் உறியக்கூடிய அரசாக உள்ளது. காவல்துறையை வைத்து கொண்டு அதிமுகவை அடக்கிவிடலாம் என்று தமிழக முதல்வர் நினைக்க வேண்டாம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருனாநிதியையே நாங்கள் பார்த்தவர்கள். எத்தனை வழக்குகள் போட்டாலும் நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம். திமுக அரசுக்கு நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டப்படும்” என்று தெரிவித்தார்.