24 C
Chennai
December 4, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுதியிருந்த கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளை விசாரிப்பதற்கான நீதிமன்றங்கள் அமைப்பதற்கு அனுமதி, நீண்ட கால நிலுவை மற்றும் மசோதாக்களுக்கான ஒப்புதல் தொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா விநியோகிப்பாளர்களிடம் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. மேலும் இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சிபிஐ கோரியது.

மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐயின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது என்றும் தனது கடிதத்தில் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுவரையில் இந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இதேபோன்று, கே.சி.வீரமணி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணை கோரியது என்றும் இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை முறையே 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டன என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர்என் ரவிக்கு எழுதிய கடிதத்திற்கு தற்போது ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா மீதான வழக்குகளை சிபிஐ விசாரித்து வருவதாகவும் அது சட்ட விசாரணையில் உள்ளதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மீதான வழக்கில் முறையாக அங்கீகரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் நகலை சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்பாக மாநில அரசிடம் இருந்து எந்த கோரிக்கை மனுவோ கடிதமும் வரவில்லை என்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

–பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy