மகாராஷ்ட்ரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒரு மாதத்திற்குள் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்றும், முதல்வர் இடத்தை அஜித்பவார் நிரப்புவார் என்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜக கூட்டணியில் இணைந்தார். அஜித்பவார் துணை முதலமைச்சராகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து, மொத்தமுள்ள 53 எம்எல்ஏக்களில் 40 பேர் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாக அஜித் பவார் கூறியிருந்த நிலையில், யாருக்கு ஆதரவு அதிகம் என்பதை நிரூபிக்கும் வகையில், அஜித் பவார் மற்றும் சரத்பவார் தனித்தனியே ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அனைத்து கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு இருவரும் தனித்தனியே அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில், பாந்த்ரா-வில் உள்ள எம்இடி மையத்தில் அஜித் பவாரின் கூட்டத்திற்கு 29 எம்எல்ஏக்களும், 3 எம்எல்சிக்களும், வந்திருந்தனர். அதே சமயம் ஒய்.பி.சவான் ஆடிட்டோரியத்தில் சரத் பவார் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு 14 எம்எல்ஏக்கள் வருகை புரிந்தனர்.
கூட்டத்தில் பேசிய அஜித் பவார், தனக்கு ஆதரவாக 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளதாகவும், எதிர் கூடாரத்தின் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்களும் கூட தன்னுடன் இப்போதும் தொடர்பில் உள்ளதாக தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி, மகாராஷ்டிராவின் முதலமைச்சராக வேண்டும் என்று தாம் ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார். சரத் பவார் தான் தனக்கு ஹீரோ என்றும், அவர் ஆசீர்வதித்து எங்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் தாம் குறைவாகவே பேசியுள்ளதாகவும், வருங்காலங்களில் எல்லாவற்றையும் கூற வேண்டிய நிலை ஏற்படலாம் என்று சரத் பவாருக்கு எச்சரிக்க விடுத்த அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் 90 இடங்களில் தனது தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அவர் அப்போது கூறினார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் அம்மாநில அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிவசேனா கட்சியை உடைத்த விவகாரத்தில் ஏக்நாத் ஷிண்டேவும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் ஒரு மாதத்தில் தகுதி நீக்கம் செய்யப்படலாம் எனக் கூறியுள்ளார். அதோடு ஏக்நாத் ஷிண்டேவுக்கு பதிலாக முதலமைச்சராக அஜித்பவார் பொறுப்பேற்பார் எனவும் பிருத்விராஜ் சவான் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சிலர் மீண்டும் உத்தவ் தாக்கரே அணியில் தஞ்சம் அடைய முயல்வதாக தகவல்கள் வெளியாயின. இதற்கு பாஜகவும், ஏக்நாத் ஷிண்டே தரப்பும் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படாது என தனது ஆதரவாளர்களுக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உறுதி அளித்து சமாதானப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பிருத்விராஜ் சவான் கருத்து மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.