பட்டு வேட்டி, பட்டு சட்டை சகிதமாக வந்து சாமி தரிசனம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவி..!

உத்தரகோசமங்கையில் உள்ள புகழ்பெற்ற மங்களநாத சுவாமி கோயிலுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு வேட்டி, பட்டு சட்டை சகிதமாக வந்து சாமி தரிசனம் செய்தார். அங்கு ஆளுநருக்கு பூரண கும்ப மரியதை அளித்து பரிவட்டம்…

உத்தரகோசமங்கையில் உள்ள புகழ்பெற்ற மங்களநாத சுவாமி கோயிலுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு வேட்டி, பட்டு சட்டை சகிதமாக வந்து சாமி தரிசனம் செய்தார். அங்கு ஆளுநருக்கு பூரண கும்ப மரியதை அளித்து பரிவட்டம் கட்டப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கிருந்து கார் மூலம் ராமநாதபுரம் சென்றடைந்த அவர், அங்கு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். காலையில் மண்டபம் கேந்திர வித்யாலயா பள்ளிக்கு சென்ற அவர், மாணவர்கள்-ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். பிறகு மாலை தேவிப்பட்டினத்தில் சென்று, அங்குள்ள மீனவர்களை சந்தித்து பேசிய ஆளுநர், அங்கிருந்து எட்டிவயல் என்ற இடத்திற்கு சென்று விவசாயிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் உள்ள புகழ்பெற்ற மங்கள நாதர் மற்றும் மங்களநாயகி, மரகத நடராஜர் சன்னதி, இலந்தை மரம் ஆலயம் ஆகிய இடங்களில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு வேட்டி, பட்டு சட்டை சகிதமாக வந்து சாமி தரிசனம் செய்தார். இத்திருக்கோயில் உலகில் முதல் முறையாக சிவனுக்கு கட்டப்பட்ட ஆலயமாக மட்டுமின்றி 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக்குலுங்குகிறது. அப்பேற்பட்ட சிறப்புகளை கொண்ட இந்த ஆலயத்தின் உள்ளே தரிசனம் செய்ய வந்த ஆன்மீக பக்தர்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆசி பெற்றார். இதற்கு முன்னதாக தேவஸ்தானம் சார்பில், நிர்வாகச் செயலாளர் பழனிவேல் பாண்டியன் தலைமையில் குருக்கள், தமிழக ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதைசெய்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆலய முழுவதும் நடந்தே சென்று ஒவ்வொரு ஆலயங்களிலும் பக்தியுடன் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

அதைத் தொடர்ந்து பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கும், மாலையில் கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கும், சென்று அஞ்சலி செலுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை வந்து விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். ஆளுநர் வருகையையொட்டி ராமநாதபுரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.